ஆங் சான் சூகிக்கு 60 வருடங்கள் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு!
மியான்மர் நாட்டின் பெண் தலைவரான, ஆங்சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆங் சான் சூகிக்கு 60 வருடங்கள் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியான்மரில், கடந்த வருட கடைசியில் நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் அரசு, அந்நாட்டு இராணுவத்தால், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் திகதி அன்று கவிழ்க்கப்பட்டது.
அதன்பின்பு, ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர். இதில், தற்போது வரை, 900-த்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக, ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவரான ஆங்சான் சூகி உட்பட பல தலைவர்களை இராணுவம், வீட்டு காவலில் வைத்தது.
இந்நிலையில், ஆங்சான் சூகி மேல், தேர்தலில் சட்டத்தை மீறி வாக்கி டாக்கி பெற்றது, தேசத்துரோக வழக்கு, ரகசிய சட்டத்தை மீறியது மற்றும் சட்டவிரோதமாக தங்கம் பெற்றது போன்ற பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இதற்கான விசாரணை, வரும் அக்டோபர் மாதம் முதல் திகதியில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்திலும், ஆங் சான் சூகி குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில், ஒவ்வொரு வழக்கிற்கும் 15 ஆண்டுகள் என்று மொத்தமாக 60 வருடங்கள் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆங் சான் சூகி, நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடி, 21 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.