மியான்மர் தலைவர் ஆங்சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை.! தீர்ப்பளித்த நீதிமன்றம்
மியான்மர் அரசின் ஆலோசகராக இருந்த ஆங்சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பொதுத் தேர்தலில் ஆங்சான் சூகியின் கட்சி வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.
ஆனால் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக கூறி, ஆங்சான் சூகி கட்சியின் அரசை, கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
தேர்தலின்போது சட்ட விரோதமாக வாக்கி டாக்கி வாங்கியது, தேசத்துரோகம், ரகசிய சட்டத்தை மீறியது, சட்ட விரோதமாக தங்கம் பெற்றது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது எனப் பல வழக்குகள் ஆங் சான் சூகி மீது வழக்கு தொடரப்பட்டன.
இந்நிலையில், ஆங் சாங் சூச்சிக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய ஆங் சாங் சூகிக்கு 505 (பி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.