அவுஸ்திரேலியாவில் மேலும் ஒரு இலங்கை தமிழ் இளைஞர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவில் 35 இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெல்பர்ன் Thomastown-ஐச் சேர்ந்த தனேஸ்குமார் புத்திசிகாமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தனேஸ்குமார் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் மெல்பனில் வாழ்ந்து வந்ததாகவும், உற்பத்தி துறையில் பணிபுரிந்த இவர் கோவிட் பரவலையடுத்து வேலையை இழந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை, மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றினால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக, இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.
கடந்த சில மாதங்களுக்குள் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் , அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்து வருவதாகவும் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் கூறியுள்ளார்.
இதேவேளை தனேஸ்குமாரின் இறுதிநிகழ்வுகளை நடத்துவதற்கான நிதிசேகரிப்பில் தமிழ் ஏதிலிகள் கழகம் ஈடுபட்டுள்ளதாகவும் அரன் மயில்வாகனம் மேலும் தெரிவித்துள்ளார்.