டெல்டா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடும் அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்டா வகை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.
இந்நநிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 262 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் கடந்த 6 வார காலமாக ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், வைரஸ் பரவல் குறைந்த பாடில்லை. இதுகுறித்து நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் முதல்-மந்திரி கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், ‘‘சுகாதார விதிகளை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.
அவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்’’ என்றார். இதனிடையே குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கெய்ரன்ஸ் நகரில் ஒருவருக்கு இதுவரை கண்டிராத புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த நகரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.