2022 பாதிவரை ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்படாது
2022-ஆம் ஆண்டில் பாதி வரை ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் முழுமையாக திறக்கப்படாமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்நிலையில் பல நாடுகள் தங்கள் நாடுகளில் தொற்று அதிகரிப்பை தவிர்ப்பதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆஸ்திரேலியா சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இந்த கொரோனா பரவல் அதிகரிக்கக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் வர்த்தக மந்திரி டேன் தெஹானிடம் (Dan Tehan), விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சர்வ தேச எல்லைகள் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் 2022-ஆம் ஆண்டில் பாதி வரை முழுமையாக திறக்கப்படாமல் போகலாம். ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்தும் இடையேயான பயணம் மீண்டும் திறக்கப்படும் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை , நேற்று மட்டும் ஆஸ்திரேலியாவில் புதியதாக 21 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.