உச்சியை எட்ட முயன்ற காதல்… பனியில் உறைந்த உயிர்!”
ஆஸ்திரியாவில் தனது காதலியுடன் நாட்டின் உயர்ந்த சிகரத்தை ஏற முயன்றபோது ஏற்பட்ட சோக சம்பவத்தில், காதலி பனியில் உறைந்து உயிரிழந்த வழக்கில், இளைஞருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
37 வயதான குற்றஞ்சாட்டப்பட்ட நபர் “கடுமையான அலட்சியத்தால் மனிதவதம்” குற்றத்தில் ஈடுப்டார் என அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு 5 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும், 9,600 யூரோ (சுமார் 11,300 அமெரிக்க டொலர்) அபராதமும் விதிக்கப்பட்டது.

தனியுரிமை விதிகளின்படி அவரது பெயர் வெளியிடப்படவில்லை. இந்த துயர சம்பவம் 2025 ஜனவரியில் இடம்பெற்றது.
37 வயது நபரும், அவரது 33 வயது காதலியும், ஆஸ்திரியாவின் மேற்கு பகுதியில் உள்ள நாட்டின் உயர்ந்த சிகரமான க்ராஸ்லொகன்கர் Grossglockner (3,798 மீட்டர் உயரம்) ஏற முயன்றனர்.
சிகரத்திலிருந்து சுமார் 50 மீட்டர் கீழே இருக்கும் போது, காதலி பனியில் உறைந்து உயிரிழந்தார்.
அப்போது அவர் அவளை அங்கு விட்டு இறங்கிச் சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தன்னை குற்றமற்றவர் என வாதிட்டார்.
குற்றவாளி மலையில் நிலைமையை தவறாக மதிப்பிட்டார்; ஆனால் காதலியை திட்டமிட்டு விட்டு சென்றவர் அல்ல. “நான் உங்களை கொலையாளி என பார்க்கவில்லை. குளிர்ந்த இதயமுள்ள மனிதர் என்றும் பார்க்கவில்லை. உதவி கேட்க முயன்றவராகவே பார்க்கிறேன்,” என நீதிபதி குறிப்பிட்டார்.
அதேவேளை, “தலைமை பொறுப்பை சரியாக ஏற்க தவறியுள்ளார். அவசர அழைப்பு முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தாலோ அல்லது திரும்பிச் செல்ல முடிவு செய்திருந்தாலோ, பெண் உயிர் தப்பியிருப்பார்” என்றும் நீதிபதி கூறினார்.
அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய இந்த வழக்கில், குறைந்த அளவிலான தண்டனையே விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் பேசிய குற்றஞ்சாட்டப்பட்ட நபர், “எல்லையற்ற வருத்தத்தில் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு, ஆபத்தான மலை ஏற்றங்களில் “பொறுப்பு மற்றும் முடிவெடுக்கும் திறன்” எவ்வளவு முக்கியமானது என்பதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது.