காருடன் பச்சிளம் குழந்தை கடத்தல்... கனேடிய பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் காருடன் தூக்கத்தில் இருந்த பச்சிளம் குழந்தையும் கடத்தப்பட்ட விவகாரத்தில் பொலிசார் துரித நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
கடத்தப்பட்ட குழந்தையின் வயதை கணக்கில் கொண்டு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சில மணி நேரத்திலேயே குழந்தை மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பகல் சுமார் 8.35 மணியளவில் க்ளோவர்டேல் பகுதியில் கார் ஒன்று திருடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த காரின் பின்பக்க இருக்கையில் 1 வயதான குழந்தை ஒன்றும் தூக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவலால், உடனடி களத்தில் இறங்கிய சர்ரே பொலிசார், தீவிர நடவடிக்கை முன்னெடுத்தனர். பல குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டனர். அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில், சுமார் 9.20 மணியளவில் வழிபோக்கர் ஒருவர், குழந்தையுடன் கார் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், அம்பர் எச்சரிகையையும் ரத்து செய்தனர். குழந்தையை பத்திரமாக மீட்ட பொலிசார், அதன் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
முன்னதாக பிரிட்டிஷ் கொலம்பியா அவசர மருத்துவ உதவிக்குழுவினர் குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் சந்தேக நபர் அல்லது நபர்களை தேடிவருவதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரியவர, பொலிசாரை நாடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.