அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பெற்றோரை இழந்து தவிக்கும் பாலகன் !
அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4ஆம் திகதி இடம்பெற்ற கொடி அணிவகுப்பு கொண்டாட்டம் அந்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது.
இதன்போது சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதியான ஹைலேண்ட் பார்க்கில் நேற்று நடந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட மக்கள் மீது, நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருதுள்ள நிலையில் சுதந்திர தினத்தன்று இடம்பெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் அமெரிக்க மக்களைத் துயரத்தில் ஆழ்த்யுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராபர்ட் கிரிமோ எனும் 22 வயது வெள்ளையின இளைஞரைப் பொலிஸார் பிடித்து விசாரித்துவந்தனர். முதலில் அவரை ‘பெர்சன் ஆப் இன்டெரஸ்ட்’ எனும் அடிப்படையில் பிடித்துவைத்திருந்த பொலிஸார், பின்னர் அவரைக் கைதுசெய்தனர். அதேசமயம் ஹைலேண்ட் பார்க் படுகொலை சம்பவத்தில் பல துயரக் காட்சிகள் நிகழ்ந்ததைக் காணொலிப் பதிவுகள் பதிவுசெய்திருக்கின்றன.
அந்த வகையில், அந்தச் சம்பவத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்த 2 வயதுக் குழந்தை ஏய்டனுக்கு நேர்ந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்தப் பாலகனின் பெற்றோர் கெவின் மெக்கார்த்தி மற்றும் இரினா மெக்கார்த்தி இருவரும் ராபர்ட் கிரிமோவின் துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் வெறி பிடித்த நபரின் கொலைவெறிக்குப் பெற்றோர் இருவரையும் பறிகொடுத்த அந்தக் குழந்தை தன்னந்தனியாகத் தவழ்ந்து சென்ற காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.
அங்கிருந்தவர்கள் அந்தக் குழந்தையைப் பத்திரமாகத் தூக்கிச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸார் அக்குழந்தையின் தாத்தா – பாட்டியிடம் ஒப்படைத்தனர். தந்தையும் தாயும் இறந்துவிட்டதை அறியாத அந்தக் குழந்தையின் நிலை பலரையும் கலங்கச் செய்துவிட்டது. அதேசமயம் “அப்பாவும் அம்மாவும் சீக்கிரம் வருவார்கள்” என மழலை மொழியில் தனது தாத்தா – பாட்டியிடம் அந்தக் குழந்தை கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் ஏய்டனின் எதிர்காலத்துக்கு உதவ, மனிதாபிமானம் கொண்ட சிலர் நிதி திரட்டத் தொடங்கியிருக்கின்றனர். பல்வேறு காரணங்களை முன்னிட்டு நிதி திரட்டும் ’கோ பண்ட் மீ’ (GoFundMe) இணையதளத்தில் அந்தக் குழந்தைக்காக நிதி திரட்ட பிரத்யேகப் பக்கம் தொடங்கப்பட்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.