கனடாவில் சைக்கிளோட்டிச் சென்ற தம்பதி மீது கரடிகள் கொடூர தாக்குதல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கூடநேய் (Kootenay) பிராந்தியத்தில் சைக்கிளோட்டிச் சென்ற தம்பதியினர் மீது கரடிகள் கொடூர தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கிரெஸ்டன் (Creston) பகுதியில் உள்ள பாதையில் இடம்பெற்றுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பிய வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு தம்பதியினர் கூடநேய் ஆற்றின் அருகே மின்சார மிதிவண்டியில் பயணிக்கையில், கணவர் அலறுவதை மனைவி கேட்டு பார்த்தபோது, ஒரு கிரிஸ்லி (Grizzly) கரடி தன்னை நோக்கி ஓடி வருவதை கண்டுள்ளார்.
அவர் உடனடியாக கரடி விரட்டும் ஸ்ப்ரே (bear spray) பயன்படுத்தியதுடன், பின்னர் தனது கணவரை வேறொரு கரடி தாக்கிக் கொண்டிருப்பதையும் கவனித்துள்ளார்.
அதற்கும் ஸ்ப்ரே பயன்படுத்தியதையடுத்து இரண்டும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் கடுமையாக காயமடைந்த ஆண் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் கரடிகளைத் தேடும் பணிகள் தொடரப்பட்டாலும், அவற்றைக் காணவில்லை. பாதுகாப்புக்காக மூன்று நடைபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கரடிகளைப் பார்த்தாலோ அல்லது ஆபத்தான சந்திப்புகள் ஏற்படும்போதோ, உடனடியாக 1-877-952-7277 என்ற இலக்கத்துக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.