இன்னும் ஐந்தே ஆண்டுகள் தான்..உலகமே தலைகீழாக மாறிடும் ; பில் கேட்ஸ் வெளியிட்ட தகவல்
ஏஐ துறை இப்போது உலகில் மிகப் பெரிய புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இதன் எதிர்காலம் குறித்து உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அச்சப்படத் தேவையில்லை
"அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வேற லெவலில் வளர போகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை.. இதன் மூலம் நமக்குப் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.
வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடுகளில் சுமார் 60% வேலைகள் காலியாகும் என்றும் சர்வதேச அளவில் 40% வேலைகள் காலியாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலாக பில் கேட்ஸ் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்புகள்: இது குறித்து பில் கேட்ஸ் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும் போதும் அச்சம் வரத் தான் செய்யும். இதனால் வேலைவாய்ப்புகள் காலியாகும் என்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்காது.
1900இல் விவசாய உற்பத்தியைத் தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் இப்போது விவசாய வேலைகளைத் தாண்டி பல புதிய வேலைகள் உருவாக்கியுள்ளோம். இதனால் மக்கள் வாழ்க்கையும் மேம்பட்டே இருக்கிறது. இந்த ஏஐ அதுபோலத் தான் இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.. பல்வேறு தரப்பினருக்கும் இது மிகப் பெரியளவில் உதவும்.
மக்களின் வாழ்க்கையை இது ஈஸியாக்கும். இந்த ஏஐ கணினி போல இல்லை. அதை அணுக உங்களுக்கு பிரத்தியேக கருவி எல்லாம் தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை இணையத்தில் கணெக்ட் செய்தாலே போதும். நம்மால் ஏஐ சாதனங்களை அணுக முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
உதவி: ஒரு காலத்தில் உலகில் மிகப் பெரிய கோடீஸ்வரர் பட்டியலில் டாப் இடத்தில் இருந்தவர் பில் கேட்ஸ்.. உலக நன்மைக்காக உழைக்க உள்ளதாகவும் மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தனது செல்வத்தைப் பயன்படுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
அதன்படி அவர் மருத்துவம் தொடங்கி பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் அவர் உலகின் பெரும் பணக்காரர் என்ற பட்டத்தையும் இழந்தார். இ
து தொடர்பாக அவர் கூறுகையில், "நான் மக்கள் நலனுக்காகச் செல்வத்தைச் செலவழிக்கிறேன். எனது தனிப்பட்ட செலவுக்கு போதுமான பணம் என்னிடம் உள்ளது, அதைத் தாண்டி இருக்கும் செல்வத்தை மட்டுமே ஆய்வுகளுக்கு செலவழிக்கிறேன். இதனால் மனித சமுதாயம் முன்னேறினால் அதை நினைத்து எனக்கு மகிழ்ச்சி தான்" என்று அவர் தெரிவித்தார்.