கால்வாயில் முட்டிய கப்பலால் பலகோடி ரூபாய் வர்த்தகம் முடக்கம்
ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும், ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையேயான மிக முக்கியமான கடல்வழி போக்குவரத்தாக, சூயஸ் கால்வாய் விளங்குகிறது. இந்த சூயஸ் கால்வாயில் பயணித்துக் கொண்டிருந்த, தைவானின் எவர்கிரீன் நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல் ஒன்று, திடீரென வீசிய காற்றால் திசை திரும்பி, இரண்டு கரைகளிலும் முட்டிக் கொண்டுள்ளது.
இதனால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடல்வழி போக்குவரத்தை எளிதாக்க 1869’இல் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சூயஸ் கால்வாய் 193 கிமீ நீளமும், 24 மீ ஆழமும், 205 மீ அகலமும் கொண்டது.
இதில் 2 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற மிகப்பெரிய கப்பலான எவர் கிவன் , தற்போது கால்வாயை அடைத்துக் கொண்டு நிற்பதால், மற்ற கப்பல்கள் செல்ல வழியில்லாமல் சிக்கியுள்ளன. இந்த நிலையில் கப்பலை திசை திருப்பி, பாதையை மீட்டெடுக்க குறைந்தது இரண்டு நாளாகும் என சூயஸ் கால்வாய் நிர்வாகம் அறிவித்துள்ளதுடன் , கப்பலை மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதேவேளை உலகின் பத்து சதவீத வர்த்தகத்தைக் கொண்டுள்ள இந்த கடல் வழிப் பாதை முடக்கத்தால், ஏற்கனவே பல கோடி ரூபாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.