அழிந்துவிட்டதாக நினைத்த அரிய வகை பறவையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள்!
உலகமயமாதலாலும், காலநிலை மாற்றத்தாலும் பல்வேறு பறவை, விலங்கு இனங்கள் அழிந்து வருகின்றன. காடுகளில் வசித்த பல அரிய பறவைகள் இன்று உலகில் இல்லை. அப்படி அழிந்ததாக நினைக்கப்பட்ட ஒரு பறவை இனத்தை தற்போது கண்டுபிடித்துள்ளனர். ப்ளாக் ப்ரவுடு பாப்ளர் என்ற பறவையை 170 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடித்துள்ளனர் பறவை ஆர்வலர்கள். இந்த பறவை தற்போது இந்தோனேசியா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள பறவை ஆர்வலர் கஸ்டின் அக்பர், இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அந்த பறவைதானா என்ற சந்தேகம் இருந்தது. பின்னர் உறுதிப்படுத்தப்பட்டவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. 1850களில் போர்னியோ தீவுகளில் காணப்பட்ட ப்ளாக் ப்ரவுடு பறவை பின்னாட்களில் மனிதர்களின் கண்களுக்கு புலப்படாமலேயே போனது. இதனையடுத்து பறவை குறித்து தீவிர தேடுதலில் இருந்த பறவை ஆர்வலர்கள், ப்ளாக் ப்ரவுடு குறித்த சில தகவல்களையும் போர்னியோ தீவுகள் அருகே வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு சொல்லிக் கொடுத்து தகவல் தெரிவிக்கச் சொல்லியுள்ளனர்.
அப்படியாக பறவை குறித்த தகவல் பறவை ஆர்வலர்களுக்கு வந்துள்ளது. அவர்கள் எடுத்த புகைப்படம் பின்னர் பறவை ஆர்வலர் கஸ்டின் அக்பருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் இருப்பது ப்ளாக் ப்ரவுடு பறவைதான் எனகிட்டத்தட்ட உறுதி செய்த அக்பர் அதனை சக பறவை ஆர்வலரும், ஆய்வாளருமான டிங்கிலி யானுக்கு அனுப்பி உள்ளார்.
இது குறித்து ஆச்சரியம் தெரிவித்த டிங்கிலி, அது ப்ளாக் ப்ரவுடு என தெரியவந்ததும் என்கண்களில் நீர் வழிந்தது.
இது உண்மையிலேயே இந்தோனேசியா பறவை ஆர்வலருக்கு மிகப்பெரிய கவுரவம். போர்னியோ தீவு சாதாரணமானது அல்ல. அதில் இன்னும் பல ஆச்சரியங்கள் புதைந்துள்ளன என தெரிவித்தார்.


