கனடாவில் தன்னைப்போன்ற மற்றொரு கருப்பின மனிதர் கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்த்தவருக்கு நேர்ந்த பரிதாபம்
கனடாவில், கருப்பினத்தவர் ஒருவர் கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்த்த மற்றொரு கருப்பின இளைஞர் பொலிசாரால் முரட்டுத்தனமாக கையாளப்பட்டிருக்கிறார்.
கனடாவின் மொன்றியலில், தன் நண்பர் வீட்டுக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Prodil Houanhou, ஒரு கருப்பினத்தவர் கைது செய்யப்படுவதைக் கண்டு, நின்று அதை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.
உடனே அவரை கவனித்த பொலிசார் இருவர், என்ன, வீடியோ எடுக்கப்போகிறாயா, எடு, என்று கேட்டபடி அவரை நெருங்கியிருக்கிறார்கள். ஒருவர், உனக்கு கைது செய்யப்பட்ட அந்த நபரைத் தெரியுமா என்று Prodilஇடம் கேட்டிருக்கிறார்.
எனக்குத்தெரியாது என Prodil கூற, மற்றொரு பொலிசார், உனது சைக்கிளில் ரெஃப்லெக்டர் இல்லை, ஆகவே உனது அடையாள அட்டையைக் கொடு என்று கேட்டிருக்கிறார்.
எதற்காக எனது அடையாள அட்டையைக் கொடுக்கவேண்டுமென்று கேட்ட Prodil, தனது மொபைலை எடுத்து நடப்பதை வீடியோ எடுக்க முயன்றிருக்கிறார். அவ்வளவுதான், அவரது மொபைலை பிடுங்கி எறிந்த பொலிசார் அவரை பிடித்து சுவருடன் தள்ளி, அவருக்கு கைவிலங்கிட்டு, அவரை சோதனையிட்டுள்ளனர்.
நீண்ட நேரமாக நடந்த இந்த அராஜகத்தை மக்கள் பலர் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு வழியாக Prodil விடுவிக்கப்பட, அவர்கள் வந்து அவரை அக்கறையுடன் விசாரித்தார்களாம்.
ஒருவர் என் வீட்டுக்கு மதிய உணவுக்கு வாருங்கள் என Prodilக்கு அழைப்பு கொடுக்க, மற்றொருவர் வாருங்கள் நாம் காபி சாப்பிடச் செல்வோம் என அழைத்தாராம்.
தன்னை நடத்திய விதத்திற்காக பொலிசார் மீது புகாரளிக்க இருக்கிறாராம் Prodil. நான் கருப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே இது நடந்தது என்று நினைக்கிறேன் என்று கூறும் Prodil, இது குறித்து நாம் பேசியாகவேண்டும் என்கிறார்.