பிரிடிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ நிலை மோசமாகும் சாத்தியம்
பிரிடிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மாகாணத்தின் காட்டுத்தீ சேவை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பம், வறட்சி மற்றும் காற்று மூன்றும் சேர்ந்து தீ பரவலுக்கு இத்தகைய சூழ்நிலை ஏற்படுத்தும் என அந்த அமைப்பின் அண்மைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மோசமான நிலை காணப்படுவது மாகாணத்தின் வடகிழக்கு பகுதியிலாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதியில் இரண்டாவது முக்கிய காட்டுத்தீயாக Summit Lake பகுதியில் ஏற்பட்ட தீ, தற்போது “மோசமான காட்டுத்தீ” பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக அலாஸ்கா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மூடுவதற்கு நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காட்டுத்தீ 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளதுடன், கடந்த புதன்கிழமையே இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மனித செயல்பாடே இதற்கான காரணமாக சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையால் Steamboat மற்றும் Summit Lake இடையிலான பாதையில் உள்ள வீடுகள் கட்டிடங்களில் வசிப்போருக்கு “நேரடி வெளியேறல் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல இடங்களில் காட்டுத்தீ பரவுகை காணப்படுவதனால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், மாவட்ட நிவாரண திட்டங்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.