அகதிகளுடன் நடு கடலில் கவிழ்ந்த படகு ; 20 பேர் பலி
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 97 பேர் லிபியாவில் இருந்து படகில் மத்திய தரைக்கடல் வழியாக இன்று ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோத அகதிகள்
அகதிகள் பயணித்த படகு இத்தாலியின் லெபிடுசா தீவு அருகே சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த இத்தாலி கடற்படையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மீட்புக்குழு பணியில் ஈடுபட்டனர்.
இதில் 60 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 20 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
20 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 17 பேரின் நிலை என்ன? என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.