நடு கடலில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி! 9 மீனவர்கள் மாயம்
இந்தோனேஷியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று (01-03-2023) மீன் பிடிக்க மீனவர்கள் பலர் தங்களது படகுகளில் சென்றனர்.
அப்போது பலத்த காற்று வீசியதால் அலையின் வேகம் அதிகரித்தது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தவர்கள் உடனே கரை திரும்புமாறு அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது.
எனினும், இந்த அதிக அலை காரணமாக மீன் பிடிக்க சென்றிருந்த ஒரு படகு கடலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படகில் இருந்த ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயினர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.