பீப்பாய்க்குள் ஆணின் சடலம்: பொதுமக்கள் உதவி கோரும் கனேடிய பொலிசார்
கனடாவின் பிராட்ஃபோர்ட் கால்வாயில் பீப்பாய்க்குள் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சடலமானது ரொறன்ரோவில் தன்பால் ஈர்ப்பாளர்கள் சமூகத்தை சேர்ந்த 37 வயது Mojtaba Shabani என அடையாளம் காணப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவலேதும் பெற முடியாமல் விசாரணை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
ஏப்ரல் 15ம் திகதி பிராட்ஃபோர்ட் கால்வாயில் பீப்பாய்க்குள் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட Mojtaba Shabani சடலம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், அவரது மரணம் ஒரு கொலை என்று முடிவுக்கு வந்துள்ளதுடன், தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஈரானியரான ஷபானி 2010ல் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். மேலும், விசாரணை அதிகாரிகளால் ஷபானியின் உள்ளூர் அல்லது வெளிநாட்டு உறவினர்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
ஷபானி தன்பால் ஈர்ப்பாளர் என்பதால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றே பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், விசாரணை முடிவிலேயே உண்மை வெளிவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.