ரொறன்ரோ உயிரியல் பூங்கா அருகே தீக்காயங்களுடன் ஆணின் சடலம்
ரொறன்ரோ உயிரியல் பூங்கா அருகாமையில் ஆணின் சடம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
ஸ்கார்பரோவில் உள்ள பழைய ஃபின்ச் அவென்யூ அருகே ரீசார் சாலையில் நள்ளிரவு தாண்டிய நிலையில் தீ விபத்து தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். இந்த நிலையிலேயே ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபருக்கு 25 முதல் 35 வயதிருக்கலாம் எனவும், சராசரியான உடல் வாகுடன் ஐந்து அடி எட்டு முதல் ஐந்து அடி பத்து அங்குலம் வரையில் உயரம் இருக்கலாம் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் மீட்கப்பட்ட பகுதி புறநகர் என்பதாலும், நள்ளிரவு சுமார் 12.12 மணியளவில் அப்பகுதியில் ஜன நடமாட்டமே இல்லை எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் காட்சிகள் கண்டிருந்தால் பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கை படுகொலை சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரிகள் தரப்பு விசாரணைக்கு எடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை உடற்கூராய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும், அப்போது மரண காரணம் தெரிய வரலாம் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
ரொறன்ரோ உயிரியல் பூங்கா அருகாமையில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் கண்டிப்பாக விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.