இத்தாலியில் காணாமல் போன இலங்கையர் சடலமாக மீட்பு
இத்தாலியின் மிலன் மாகாணம், கோர்சிகோ (Corsico) பகுதியில் உள்ள 'நாவிளிகோ கிராண்டே' (Naviglio Grande) கால்வாயில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்த 38 வயதுடைய ஷான் ஹேமல் கோமிஸ் முஹந்திரம்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கணவரைக் காணவில்லை மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கடந்த செவ்வாய்க்கிழமை (16) முதல் தனது கணவரைக் காணவில்லை என அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையிலேயே, சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கால்வாய் நீரோட்டத்தில் மனித உடலொன்று அடித்துச் செல்லப்படுவதைக் கவனித்த பாதசாரிகள், உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் சடலத்தை மீட்டனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, அந்த நபர் பல மணி நேரமாகத் தண்ணீரில் சிக்கியிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் வன்முறைகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதற்கான எந்தவொரு வெளிப்புற அடையாளங்களும் காணப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந் நாட்டு பொலிஸார் மீற்கொண்டு வருகின்றனர்.