இந்தியாவில் குண்டு வைத்தவர் ஜேர்மனியில் சிக்கினார்!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட கீழமை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 23 ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பைக் ஏற்படுத்திய நிலையில் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது தீவிரவாத அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணையைமேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதில் ஒருவர் ஜெர்மனியிலும், மற்றொரு நபர் பாகிஸ்தானிலும் உள்ளதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த நாடுகளின் அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதற்கட்டமாக ஜெர்மனியில் ஜஸ்வந்த் சிங் முல்தானி(வயது 45) என்ற நபரை ஜெர்மனி பொலிசார் கைது செய்துள்ளனர். அதேவேளை கைதானவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து ஜெர்மனி பொலிசார் வழங்கிய தகவலை அடுத்து, இந்தியாவில் இருந்து சிறப்புப் படையினர் ஜெர்மனி சென்று விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.