போரிஸ் ஜான்சனிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியாவுக்கான பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு, குடியரசு தினத்தன்று வருகை தர இருந்த போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் புதிய உருமாறிய கொரோனா பரவியதால் கடைசி நேரத்தில் அப்பயணத்தை ரத்து செய்தார்.
இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்ட அவரது இந்தியாவுக்கான பயணம் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 26 அன்று ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகள், கூட்டங்களை வைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டது.
இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் எம்.பி., ஸ்டீவ் ரீட் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரமாட்டார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது . இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி தெரிவித்தார்.