கனடா பள்ளிக்குள் நடந்த கொடூர சம்பவத்தில் பொலிசார் நடவடிக்கை
வடக்கு யார்க் பகுதி உயர்நிலைப் பள்ளியில் சக மாணவனை கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் 15 சிறுவன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் உள்ள ஜார்ஜ் எஸ். ஹென்றி அகாடமியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸ் அளித்த தகவலில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜார்ஜ் எஸ். ஹென்றி அகாடமியில் 16 வயது சிறுவன் முகப்புக் கூடத்தின் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை 15 வயதுடைய மற்றொரு சிறுவன் அணுகியுள்ளான்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பானது. இதனையடுத்து 15 வயதுடைய சிறுவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் 16 வயதுடையவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்.
இதில் காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் முன்னெடுத்துவிட்டு தப்பிய சிறுவன் மீது உயிருக்கு தீங்களிக்கும் வகையில் தாக்குதல், ஆயுதத்தால் தாக்கியது, ஆபத்தான ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிசார் கூறியுள்ளனர்.