வின்னிபெக்கில் சிலைகள் கவிழ்ப்புக்கு பிரித்தானியா கண்டனம்
கனடா வின்னிபெக்கில் விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத்தின் சிலைகள் எதிர்ப்பாளர்களினால் கவிழ்க்கப்பட்டுள்ளமைக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Prime Minister Boris Johnson) அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
கனடாவின் முன்னாள் பழங்குடிப் பள்ளிகளில் குறிக்கப்படாத கல்லறைகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை எதிர்ப்பாளர்களிடையே கடும் கோபத்தை அதிகரித்தது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வியாழக்கிழமை கனடா தினத்தன்று வின்னிபெக்கில் உள்ள விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத் சிலைகளின் சிலைகளை கவிழ்த்தனர்.
வின்னிபெக்கில் விக்டோரியா மகாராணியின் சிலை மனிடோபா மாகாண சட்டமன்றத்திற்கு வெளியே வீழ்த்தப்பட்டதால ஒரு கூட்டம் ஆரவாரம் செய்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள், அவர்களில் பலர் ஆரஞ்சு நிற ஆடைகளை அணிந்து, கவிழ்ந்த சிலையை உதைத்து அதைச் சுற்றி நடனமாடினர். இதன்போது அருகிலுள்ள எலிசபெத் மகாராணியின் (Queen Elizabeth) சிலையும் கீழே இழுக்கப்பட்டது.
இந்நிலையில் எலிசபெத் மகாராணி (Queen Elizabeth) கனடாவின் தற்போதைய அரச தலைவராக இருக்கிறார், அதேநேரம் கனடா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது விக்டோரியா 1837 முதல் 1901 வரை ஆட்சி செய்தார். மேலும் பழங்குடி சமூகத்திற்கு ஆதரவாக பேரணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன.
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சஸ்காட்செவனில் உள்ள முன்னாள் குடியிருப்பு பள்ளிகளில் கிட்டத்தட்ட குறிக்கப்படாத 1,000 கல்லறைகள் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை முக்கியமாக கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்டு அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந் நிலையில் இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Prime Minister Boris Johnson) அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், "ராணியின் சிலைகளை சிதைப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை விக்டோரியா மகாராணி சிலை 1904 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத்தின் மைதானத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





