ஒரே நாளில் 300 பேரை நாடுகடத்தும் பிரிட்டன்!
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நாளில் 300 சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த ஒன்றை பிரித்தானிய அமைச்சர்கள் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களை நாடுகடத்துவதற்காக ஈராக்கிய குர்திஸ்தான், அல்பேனியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு செவ்வாய்கிழமை செல்லும் விமானங்களை பிரித்தானிய உள்துறை அமைச்சகம் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது .
இந்நிலையில் இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளவர்கள், பிரித்தானியாவில் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள புலம்பெயர் மையங்களில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியா முழுவதிலுமிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வலைவீசிப் பிடித்து இந்த மையங்களில் அடைத்துள்ளார்கள். இவ்வாறு அடைத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு , தாங்கள் நாடுகடத்தப்பட உள்ளது குறித்து தனித்தனியாக கடிதங்களை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை இந்த திட்டம்தான், பிரித்தானியாவிலேயே முதன்முறையாக ஒரே நாளில் 300 வெளிநாட்டவர்கள் வரை நாடுகடத்தப்படும் திட்டம் என கூறப்படுகின்றது. இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளவர்களில் ஈராக்-குர்துகள் மற்றும் அல்பேனிய நாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் கடந்த மாதம் தேசியம் மற்றும் எல்லைகள் புதிய மசோதா சட்டமாக்கப்பட்டது.
அந்த சட்டமூலம் , இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள், விசா காலாவதியாகி இருப்பவர்கள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை எளிதாக நாடுகடத்தலுக்கு அனுமதிக்கிறது.