பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் அதிரடி முடிவு!
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் கொரோனா தடுப்பூசியை விரைவில் செலுத்திக் கொள்ள இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுவதாக புகார் எழுந்தன. இதனால் அந்த தடுப்பு மருந்தை பல்வேறு ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் ஆக்ஸ்போர்டின் தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர் கூறியதாவது:- “விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன்.
இதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த தடுப்பு மருந்து நிச்சயமாக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் மருந்தாக இருக்கும். அதைத்தான் நான் போட்டுக்கொள்ளப் போகிறேன்” என்றார்.
மேலும் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுவதாகக் கூறி பல்வேறு நாடுகள் நிறுத்தி வைத்துள்ளது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கருத்தை போரிஸ் ஜான்சன் நிராகரித்தார்.