தைத் திங்களை முன்னிட்டு பிரதமரிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்த கோரிக்கை
தைத் திங்களைத் தமிழ் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த செயற்பாட்டில் இணைந்து கொள்ளுமாறு ஏனைய தமிழ் அமைப்புக்களுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய நாம் தமிழரின் தை திருநாளை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக தை மாதத்தினை தமிழர்களின் மரபுரிமை மாதமாக பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்படுவதற்காக, பிரித்தானியாவின் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தை பொங்கல் திருநாளை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உள்ளே, எம் கலை, கலாச்சார அம்சங்களை முன்னிறுத்தி தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றோம்.
நீண்ட பாரம்பரியங்களையும் நிலத்தையும் உரித்தாகக் கொண்ட எம் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவையினராகிய நாம், சர்வதேச நாடுகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் சம காலத்தில், எமக்கான தனித்துவமான கலாச்சாரம், பராம்பரிய விழுமியங்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் சென்று நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம், எமக்கான சட்டபூர்வமான உரிமைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்னும் கருப்பொருளுடன் குறித்த நிகழ்வினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த பல ஆண்டுகளாக பல தரப்பட்ட தளத்திலிருந்து குறிப்பாக பிரித்தானியாவின் ஆளும் கட்சி, எதிர் கட்சி மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்களிடமிருந்து எமக்கான ஆதரவு கிடைக்கப் பெற்று வருகிறது.
இவ்வாறான நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான அங்கீகாரத்துக்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக, சென்ற ஆண்டில் தொடங்கிய முயற்சியினால் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் கூட்டாக இணைந்து முறைப்படியான விண்ணப்பம் ஒன்றினை பிரித்தானிய பிரதமர் அவர்களிடம் முதற்கட்ட நடவடிக்கையாக தற்போது சமர்ப்பித்துள்ளோம்.
இந்த அங்கீகாரத்தின் மூலம் தமிழர்கள் சிறுபான்மை இனம் அல்ல, எமக்கான நீண்ட நெடிய வரலாறு, தனித்துவமான கலாச்சாரம், பண்பாடுகள் உள்ளன என்பதனை உலகறிய செய்ய முடியும் என்பதுடன் இனவழிப்பிற்கு உட்படுத்தப்படும் எம் மக்களின் தனித்துவத்தைப் பேணும் முறையான அரசியல் தீர்வுக்கு இவ்வாறான அங்கீகாரம் உறுதுணையாக இருக்கும் என்பது எம் நம்பிக்கை. " என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயற்பாட்டுக்கு ஒப்புதல் தந்து தம்மையும் இவ் விண்ணப்பத்தில் இணைந்து கொள்ள விரும்பும் தமிழர் நலன் பேணும் பிரித்தானியா அமைப்புக்கள், தமிழ் பாடசாலை நிர்வாகங்கள், பழைய மாணவர் சங்கங்கள், ஊர்ச் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆலய நிர்வாகங்கள் என்பன ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.