கனடாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
கனடாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
பெரும் சக்திகளின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ள நடுத்தர சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என கடந்த மாதம் பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியதற்கு பின்னர், இந்த ஒப்பந்தம் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கை, இரு நாடுகளுக்கிடையே இரகசிய இராணுவ மற்றும் பாதுகாப்பு தகவல்களின் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்ட அடிப்படையை உருவாக்குகிறது.

இரு நாடுகளுக்கும் முக்கியமான முன்னேற்றம் என பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்யுனிட்டி என தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் அஹன் கியுபெக் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ச்சோ ஹையுன் ஆகியோர்களுடன் சந்தித்து, தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில் இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்த ஒப்புக் கொண்டனர்.
இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்ட அமைப்பை உருவாக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
தென் கொரியா, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் முதலீட்டிலும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தது.
மேலும், இந்தோ-பசிபிக் மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த இணைந்து செயல்பட இரு நாடுகளும் உறுதியளித்தன.