ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்த கனடா
உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னர், கனடா புதிய தடைகளை இன்று அறிவித்துள்ளது.
கனடிய பிரதமர் மார்க் கார்னி இந்த தடைகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவுடன் தொடர்புடைய பல நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த தடைகளுக்குள் வருகின்றன. மேலும் 200-க்கும் மேற்பட்ட “நிழல் கப்பல்கள்” (Shadow Fleet vessels) மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பல்கள், சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யா சார்ந்த எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கடத்த பயன்படுவதாகக் கருதப்படுகிறது.
உலகின் அமைதி மற்றும் நியாயத்திற்கு எதிரான செயல்கள் சகிக்கமுடியாதவை. உக்ரைனின் குடிமக்களுக்கு எதிராக நடைபெற்ற இந்த தாக்குதல் பின்னணியில், நாங்கள் வலுவான பதிலை அளிக்க வேண்டும் என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று இரவு, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் மேற்கொண்ட தாக்குதலின் போது பல குடியிருப்புகள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்தன.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி இதனை "மிக கடுமையான இரவு" என தெரிவித்துள்ளார்.
இந்த தடைகள் மட்டுமல்லாமல், உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகள் வழங்கப்படுவதாகவும் கனடா அறிவித்துள்ளது.
இதில் பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் பயிற்சி ஆதரவுகள் உள்ளடங்குவதாக கனடா அறிவித்துள்ளது.