கனடாவிற்கும் சீனாவிற்கும் மீண்டும் முரண்பாட்டு நிலை ஏற்படுமா?
கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மீண்டும் முரண்பாட்டு நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் முதனிலை தொலைதொடர்பு நிறுவனங்களான ஒன்றான ஹுவாவி நிறுவனம் மற்றும் ZTE ஆகியனவற்றுக்கு கனடா தடை விதித்துள்ளது.
5ஜீ தொழில்நுட்பத்திற்குள் இந்த நிறுவனங்களின் கருவிகளை உள்வாங்குவதற்கு கனடா மறுப்பு வெளியிட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹுவாவி மற்றும் இசட்.ரீ.ஈ ஆகிய நிறுவனங்களின் கருவிகள் சாதனங்களை கனேடிய தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அனுமதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு கனேடிய தொலைதொடர்பு சட்டத்தில் விரைவில் திருத்தங்கள் செய்யப்படும் என சமஷ்டி அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹுவாவி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (நிதிப்பிரிவு) மெங் வன்சூ கைது செய்ய்பட்டதனைத் தொடர்ந்து கனடா மீது பல்வேறு தடைகளை விதித்த சீனா, கனேடிய பிரஜைகளையும் கைது செய்து தடுத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ஜீ தொழில்நுட்பத்தில் சீன கருவிகள் உள்வாங்கப்படாது என்ற தடையின் எதிரொலியாக கனடா மீதும் சீனா தடைகளை விதிக்க சாத்தியமுண்டு என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.