இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்பில் கனடா எடுத்த அதிரடி முடிவு!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமானங்களை கனடா 30 நாட்களுக்கு தடை செய்துள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நாடாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்தியாவில் நோய் பரவலின் வேகம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,32,503 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன் 2,256 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களில், கனடாவில் தரையிறங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களில் குறைந்தது ஒருவருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கனடா தெரிவித்துள்ளது.
இதில் 32 விமானங்கள் இந்தியாவில் இருந்து கனடா வந்தவை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமான சேவைகளுக்கு தடை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
இதேவேளை கனடாவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் 1.8% பேர்கள் விமான பயணிகள் என தெரிவிக்கப்படும் நிலையில், விமான சேவையை ரத்து செய்வதன் மூலம் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம் என கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.