இலங்கை பேரழிவு; 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவி
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளப்பெருக்கிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கனடா அரசாங்கம் ஆரம்ப கட்டமாக 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது.
இந்த உதவி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தற்காலிக தங்குமிடம், குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக நம்பகமான சர்வதேச அமைப்புகள் மூலம் வழங்கப்படும்.

கனடா அரசாங்கத்திற்கு நன்றி
மேலும், இது உலக உணவுத் திட்டம் (WFP) மூலமாக முன்பே வழங்கப்பட்ட உதவியின் தொடர்ச்சியாகும். இந்நிலையில் கனடிய அரசி இந்த உதவியை கனேடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்று, கனடா அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளது.
இது குறித்து கனேடிய தமிழர் பேரவையின் அறிக்கையில் ,

இலங்கையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இந்த 1 மில்லியன் கனேடிய டொலர் உதவி உடனடி நிவாரணத்தை வழங்கும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் போரும் வறுமையும் காரணமாக நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் இந்த வெள்ளத்தால் மிக அதிக சேதத்தைச் சந்தித்துள்ளன.

இந்த பகுதிகளுக்கு தாமதமின்றி உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதையும், அவசர நிவாரண நடவடிக்கைகள் முன்னுரிமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் கனேடிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது ஒரு முக்கிய முதலிட உதவி என்றாலும், பேரழிவின் பரவலான தாக்கம் காரணமாக வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் கூடுதல் நிதி மற்றும் ஆதரவு அவசியம் எனவும் கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. கனேடிய தமிழர் பேரவை பிரதிநிதிகள் அண்மையில் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, இலங்கைக்கான அவசர உதவியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த முயற்சிக்கு சாதகமான பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கனேடிய தமிழர் பேரவை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது. அவர்கள் முன்னெடுத்த பங்கு இந்த உதவி அறிவிப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானதாக அமைந்ததாக பேரவை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிதி உண்மையிலேயே அதிக அவசரத்துக்கு உள்ளான மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்காக, மேலும் நிலைமையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப தேவையான உதவிகளை பெற்றுத் தருவதற்காக, கனேடிய தமிழர் பேரவை, கனடா அரசு, இலங்கை உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படத் தயாராக உள்ளது.

கனடா அரசு நிலைமையை நெருக்கமாக கவனிக்கின்றதையும், தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்த முடிவு, சர்வதேச சமூகத்தின் தொடர்ந்த ஒற்றுமையின் சான்றாகக் கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.