அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த கனடா!
நாட்டில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜுலை’ இனக்கலவரங்களாலும் அதன் பின்னரான போர் நிலைமைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தமது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கனடா தெரிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு இருப்பினும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவாறான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை இலங்கை முன்கொண்டு செல்வது அவசியமாகும் என்றும் கனடா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘கறுப்பு ஜுலை’ இனக்கலவரம் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் (23) 38 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.
அதனை நினைவுகூரும் வகையில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் கனேடியத் தமிழர்களுடனும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ்ச்சமூகத்துடனும் ஒன்றிணைந்து, இலங்கையில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜுலை’ இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூருகின்றோம் எனவும் கனேடிய பிரதமர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.