கணவனைக் கொல்ல கூலிப்படையுடன் பேசிய பெண்: பின்னர் நிகழ்ந்த விடயம்
கனேடிய பெண்ணொருவர் தனது 18ஆவது ஆண்டு திருமண நாளில் தன் கணவரைக் கொலை செய்ய கூலிக்கு ஆள் பேசினார்.
அவருக்குத் தெரியாத விடயம் என்னவென்றால், கூலிப்படையைச் சேர்ந்தவர் என அவர் எண்ணிய நபர் மாறுவேடத்திலிருந்த ஒரு பொலிசார்!
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரைச் சேர்ந்தவர் ஆட்ரா (Audra Lynne Symbalisty, 60) என்னும் பெண். அவரது கணவர் டான் (Don Symbalisty).
2021ஆம் ஆண்டு, டான் 500,000 டொலர்களுக்கு ஆயுள் காப்பீடு எடுத்திருந்தார். தான் மரணமடைந்தால் அந்தத் தொகை தன் மனைவியைச் சேரவேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இப்படி இருந்த திருமண உறவு, 2024ஆம் ஆண்டில் தலைகீழாக மாறிப்போனது. எப்போதும் சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கை மாற, கணவனை காலி செய்ய முடிவு செய்தார் ஆட்ரா.
ஆட்ராவுக்கு, கூலிக்கு கொலை செய்யும் ஒருவரது தொடர்பு கிடைத்துள்ளது.
தங்கள் 18ஆவது ஆண்டு திருமண நாளில், சமூக ஊடகம் ஒன்றில் ’திருமணமாகி 18 ஆண்டுகள். நம்பமுடியவில்லை, திருமண ஆண்டு விழா வாழ்த்துக்கள் அன்பரே, நமது அழகான இரவு உணவுக்காக காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார் ஆட்ரா.
அதே நேரத்தில், கூலிப்படையைச் சேர்ந்த ஒருவருக்கு 5,000 டொலர்கள் கொடுத்து தன் கணவரை கொலை செய்யும்படி சொல்லிக்கொண்டிருந்தார் ஆட்ரா.
ஆனால், தான் தன் கணவரைக் கொலை செய்ய கூலி பொருத்திய ஆள் மாறுவேடத்திலிருக்கும் ஒரு பொலிசார் என்பது ஆட்ராவுக்குத் தெரியாது.
கைகால்களை உடைத்தால் போதாது, அவர் மருத்துவமனையில் எல்லாம் இருக்கக்கூடாது, நிரந்தரமாக அவரை முடித்துவிடவேண்டும், அது ஒரு விபத்து போல இருக்கவேண்டும், எனக்கு பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்றெல்லாம் அந்த பொலிசாரிடம் கூறியுள்ளார் ஆட்ரா.
மூன்று நாட்களுக்குப் பிறகு, பொலிசார் ஆட்ராவைக் கைது செய்தார்கள்! ஆட்ராவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.