இலங்கை குடும்பம் ஒன்றுக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய கனடா; காரணம் இதுதான்
அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய எட்வேர்ட் ஸ்னோவ்டனிற்கு ஹொங்கொங்கில் தங்கள் சிறிய குடியிருப்பில் அடைக்கலம் வழங்கிய இலங்கை குடும்பத்திற்கு கனடா புகலிடம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய பின்னர் ஸ்னோவ்டன் தலைமறைவாகயிருந்தவேளை அவருக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கையை சேர்ந்த சுபுன் திலின கெலெபத்த டில்றுக்சி நொரிஸ் தம்பதியினருக்கும் அவர்களது இரண்டு பிள்ளைகளிற்கும் கனடா அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. ஹொங்கொங்கில் தங்கள் ஆரம்பகட்ட அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஸ்னோவ்டனிற்கு அடைக்கலம் வழங்கிய பிலிப்பைன்சை சேர்ந்த இருவருக்கும் கனடா அடைக்கலம் வழங்கியுள்ளது. ஸ்னோவ்டனிற்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடிய அஜித்புஸ்பகுமார என்பவர் இன்னமும் ஹொங்கொங்கிலேயே தங்கியுள்ளதாகவும் ,அவர் இன்னமும் ஆபத்தான நிலையிலேயே உள்ளார் எனவும் பொர் த ரிவுஜீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவரது புகலிடக்கோரிக்கையை பரிசீலிப்பதை ஒட்டாவா துரிதப்படுத்தவேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடு;த்துள்ளது. அத்துடன் ஏழு பேரில் ஆறுபேருக்கு புகலிடம் வழங்கியுள்ளது என இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் என பொர் த ரிவுஜீஸ் அமைப்பின் தலைவர் மார்க் அன்று செகின் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நால்வரின் வாழ்வில் புதிய ஆரம்பத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என்றும், ஆனால் அஜித் ஹொங்கொங்கிலேயே உள்ளதை மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவை சரியானதை செய்யுமாறும் அஜித்திற்கும் புகலிடம் வழங்குமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2013 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் அமெரிக்கா மேற்கொண்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பல ஆவணங்களை ஸ்னோவ்டன் வெளியிட்டிருந்தார்.
அவர் தப்பியோடி ஹொங்கொங்கில் தலைமறைவாக வாழ்ந்த அவ்வேளை அவர் ரஸ்யாவிற்கு தப்பிச்செல்லும் வரை இரண்டு வாரங்களிற்கு அடைக்கலம் அளிப்பதற்கு இலங்கையர்கள் உட்பட ஏழு பேர் இணக்கம் வெளியிட்டனர்.
2016 இல் ஸ்னோவ்டன் குறித்து வெளியான ஒலிவர் ஸ்டோனின் திரைப்படத்தின் மூலம் இந்த விடயம் உலகிற்கு தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

