கனடாவில் கொரோனாவின் நான்காவது அலையைத் தவிர்க்கவேண்டுமானால் இதைச் செய்தாகவேண்டும்: நிபுணர்கள்
முதலில் சற்று மெதுவாக தடுப்பூசி திட்டத்தை துவக்கிய கனடா, டெல்டா வகை கொரோனா பரவல் குறித்து அறிந்ததும் பரபரப்பானது. இப்போது, 79 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது பெற்றுக்கொண்டாயிற்று.
இது ஒரு நல்ல எண்ணிக்கைதான் என்றாலும், கனடாவில் இன்னமும் 12 வயதுக்கு மேற்பட்ட ஆறு மில்லியன் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. ஜூன் 16க்குப் பிறகு தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை 100,000க்கு கீழேயே தங்கிவிட்டது.
இதே வேகத்தில் சென்றால், மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி அளித்து முடிப்பதற்கு இன்னும் குறைந்தது பல மாதங்கள் ஆகும். இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃப்ரேஸர் பல்கலைக்கழக தொற்று நோய் சிறப்பு நிபுணரான Caroline Colijn என்பவர், கனடாவைப் பொருத்தவரையில், எந்த அளவுக்கு தடுப்பூசி அளிப்பது, கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவதற்கேற்ற பாதுகாப்பான நிலையை உருவாக்கும் என்பதை கணிப்பது கடினம் என்கிறார்.
ஆனால், ஒரு விடயம், இப்போதைக்கு இருக்கும் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை போதாது என்கிறார் அவர்.
ஆகவே, மீண்டும் தடுப்பூசி அளிக்கும் திட்டத்தை வேகப்படுத்தினால் மட்டுமே கொரோனாவின் நான்காவது அலையைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.