இனி இவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்: அறிவித்த கனடா
கனடாவில் பெடரல் ஊழியர்கள் மற்றும் விமான பயணிகளுக்கு தடுப்பூசி இனிமுதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பெடரல் ஊழியர்கள், பெடரல் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவன ஊழியர்கள் மற்றும் விமான பயணிகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 1.5 மில்லியன் பேர்கள் அக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் கட்டாயம் இருப்பதால், உருமாற்றம் கண்டுவரும் மாறுபாடுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி கட்டாயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் அரை மில்லியன் மக்கள் நேரடியாக பெடரல் அரசாங்கத்திற்காக பணியாற்றி வருகின்றனர். மேலும் ஒரு மில்லியன் மக்கள் பெடரல் நிர்வாகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் இனி தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமான பயணிகளும், ரயில் மற்றும் சொகுசு கப்பல் பயணிகளுக்கும் இது பொருந்தும். பெருந்தொற்றின் பிடியில் இருந்து கனடாவை மிக விரைவில் மீட்க இந்த நடவடிக்கை உதவும் என்றே போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்ட தகுதியானவர்களில் 82% மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
70% மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.