இந்த அறிகுறிகளா? பிள்ளைகள் குறித்து கனேடிய பெற்றோர்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள்
கனடாவில் பாலியல் தொழில் குழுக்களிடம் தங்கள் பிள்ளைகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமது 15 வயதில் அப்படியான ஒரு குழுவிடம் சிக்கி, வாழ்க்கையை தொலைத்துவிட்டதாக கூறும் Michelle Furgiuele என்பவர், சில அறிகுறிகளையும் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அப்படியாக குழுக்களிடம் இருந்து தப்பி மறுவாழ்வு வாழ முயற்சிப்பவர்களுக்கு Michelle Furgiuele ஆதரவளித்தும் வருகிறார். பொதுவாக இதுபோன்ற குழுக்கள் 17 வயது வரையான பிள்ளைகளை குறிவைப்பதாகவும் ஆனால் 13 வயதான சிறுமிகளும் இவர்களின் இலக்கு தான் என்கிறார் Michelle Furgiuele.
மட்டுமின்றி பூர்வகுடி மக்கள் என்றால் 8 வயது சிறுமிகளையும் இவர்கள் இரையாக்குவார்கள் என்கிறார். பள்ளியில் சமூக குழுக்களை அவர்கள் அடிக்கடி மாற்றுகிறார்களா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும்,
வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறார்களா அல்லது அவர்களின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் காணப்படுகிறதா என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.
மட்டுமின்றி, இரண்டாவது அலைபேசி ஒன்றை அவர்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். மேலும், தங்கள் தோற்றத்திற்காக அதிகமாக கவனம் செலுத்துவதுடன், அதற்காக அதிக தொகை செலவிடுகிறார்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வகை வகையான ஆடைகள் மற்றும் அலங்காரங்களை அவர்கள் பயன்படுத்துவதாக இருந்து, அதற்கான தொகை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்பது உங்களுக்கு மர்மமாக இருந்தால், அதுவே அவர்கள் சிக்கிக்கொண்டுள்ளதன் பெரிய அறிகுறி என்கிறார் Michelle Furgiuele.