கனடாவில் தபால் சேவைகள் முடங்கும் அபாயம்
கனடாவில் தபால் சேவைகள் முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் தபால் திணைக்களத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த யோசனையை கனடிய தபால் திணைக்களம் நிராகரித்துள்ளது. சுமார் 55000 பணியாளர்கள் இந்த தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நிலையில் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன் வைத்திருந்தன.
இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த தபால் திணைக்களம் அவற்றை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக பொதிகள், கடித விநியோகம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இந்த நிலையில் மீண்டும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளன.
இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் மீண்டும் தபால் சேவைகள் முடங்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நியாயமற்ற கோரிக்கைகளை முன் வைப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது கோரிக்கைகளை தபால் திணைக்களம் உதாசீனம் செய்வதாக தொழிற்சங்க தரப்பிலிருந்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கபாடு ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.