ஏர் இந்தியா விமான விபத்தில் கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற இந்தியரும் உயிரிழப்பு
கனடாவில் வாழும் இந்தியப் பெண் ஒருவருக்கு, இந்தியாவின் அஹமதாபாதில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் தன் தம்பியும் உயிரிழந்துவிட்டார் என்னும் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவந்தவர் இந்தியரான பியுஷ்குமார் பட்டேல்.
நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்று தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் Reginaவில் வாழ்ந்துவந்துள்ளார் பியுஷ்குமார்.
அவரது அக்காவான அஷினி பட்டேல் கனடாவில்தான் இருக்கிறார். இந்நிலையில், அஷினியை தொலைபேசியில் அழைத்த அவரது தாய், பியுஷ்குமார் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தது குறித்து தெரிவிக்க, அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் அஷினி.
தன் தம்பி அவரது நண்பர்களை சந்திப்பதற்காக இந்தியாவிலிருந்து லண்டன் சென்றது தனக்குத் தெரியும் என்று கூறியுள்ள அஷினி, ஆனால், அவர் விபத்துக்குள்ளான அந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்தது தனக்கும் பியுஷ்குமாரின் மனைவி பிள்ளைகளுக்கும் தெரியாது என்கிறார்.
அஷினியும், பியுஷ்குமாரின் மனைவி பிள்ளைகளும் அவசரமாக இந்தியா புறப்பட்டுள்ளார்கள்.
சோகம் என்னவென்றால், பியுஷ்குமாரின் மகள்களில் ஒரு மகள் கடந்த சனிக்கிழமைதான் தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடினாள்.
ஆகவே, அவள் தன் தந்தையின் மரணச் செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வாளோ என்பது தெரியாததால், அவளிடம் பியுஷ்குமார் இறந்த செய்தியைச் சொல்லாமலே அவளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள் அவளது தாயும் அத்தையும்!