வெளிநாடு ஒன்றிற்கு அவசரமாக இராணுவத்தை அனுப்பும் கனடா: காரணம் இதுதான்
கனடா அவசரமாக தனது இராணுவ வீரர்கள் சிலரை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அனுப்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டுள்ள நிலையில், தாலிபான்கள் மீண்டும் அந்நாட்டின் பல பகுதிகளை வேகமாக கைப்பற்றி வருகிறார்கள்.
தாலிபான் இயக்கம் பிறந்த நகரமான காந்தஹாரை தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையில், அது பெரும் சாதனையாக அவர்களால் பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம், கனடா படைகள் காந்தஹாரில்தான் முன்பு முகாமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி வேகமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி வரும் நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா முதலான நாடுகள் தத்தம் நாடுகளின் தூதரக அலுவலர்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றன.
தற்போது கனடாவும் தனது தூதரக அலுவலர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்காகவும், அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகளுக்கு உதவுவதற்காகவும் தனது இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.
தூதரகங்கள் அமைந்துள்ள காபூல் நகர் தாலிபான்களின் பிடியில் இல்லை என்றாலும், இன்னும் 30 நாட்களுக்குள் அதுவும் தாலிபான்கள் வசம் சிக்கிவிடும் என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளதால் அமெரிக்கா, பிரித்தானியாவுடன், கனடாவும் தனது தூதரக அலுவலர்களை காபூலிலிருந்து வெளியேற்றி கனடாவுக்கு அழைத்துவர முடிவு செய்துள்ளது.