விரைவில் கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படும்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்
கனடாவை கொரோனாவின் நான்காவது அலை நெருங்கும் நிலையில், கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பல நாடுகளில் பொதுவாகவே பல்வேறு காரணங்களுக்காக தடுப்பூசியை எதிர்க்கும் ஒரு கூட்டம் மக்கள் இருக்கிறார்கள். தடுப்பூசியை எதிர்த்து ஆங்காங்கு பேரணிகள் நடத்தப்படுவது குறித்த செய்திகளையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
இந்நிலையில், கனடாவில் தடுப்பூசி பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அது சில குறிப்பிட்ட பணியாற்றுவோர் கட்டாயம் தடுப்பூசி பெற்றேயாகவேண்டும் என்ற அரசின் உத்தரவாக இருக்கலாம், அல்லது, தனியார் நிறுவனங்கள் சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தும் நடைமுறையாக இருக்கலாம். எப்படியும் வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் சமுதாயத்தின் பல நிலைகளில் தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரங்களை காட்டவேண்டிய நிலை உருவாக இருக்கிறது.
பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு, எல்லைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், நான்காவது அலை ஒன்று வந்துகொண்டிருப்பதையடுத்து, இதுதான் தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கான நேரம் என்கிறார்கள் நிபுணர்கள்.
சுமர் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி அளித்து, அதிக அளவில் தடுப்பூசி வழங்கிய நாடுகள் பட்டியலில் கனடா இடம்பிடித்தாலும், மீதமுள்ள 40 சதவிகிதம் பேர் இன்னமும் தடுப்பூசி பெறவில்லை அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே பெறுள்ளார்கள் என்ற நிலையும் கனடாவில் உள்ளது.
அப்படியிருக்கும் நிலையில், நாட்டில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சகஜ நிலையை நோக்கிச் செல்லும்போது, பயங்கரமான டெல்டா வகை கொரோனா வைரஸ் போன்றவை நடமாடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த தடுப்பூசி பெறாத 40 சதவிகிதத்தினர் தொற்றுக்கு ஆளாகும் ஒரு வாய்ப்பு உள்ளது. ஆக, இந்த தடுப்பூசி பெறாத கூட்டத்தால் சமுதாயத்திற்கு அழுத்தம் ஏற்படும் ஒரு நிலை உருவாகவும் வாய்ப்புள்ளது.
ஆக, இவற்றையெல்லாம் தடுக்கவேண்டுமானால், தடுப்பூசியை கட்டாயமாக்குவதே சரியான தீர்வாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே, விரைவில், கனடாவில் தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.