அமெரிக்கா விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை ; கனடா திட்டவட்டம்
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜன.,20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
சண்டையில் இருந்து பின்வாங்க மாட்டோம்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்கப்படும் என கனடா அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பொருட்களுக்கு மேலும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தநிலையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கும் அமெரிக்காவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை "வர்த்தக போர்" என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ இதன் மூலம் அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை.கனடியர்கள் நியாயம் மற்றும் கண்ணியமிக்கவர்கள். சொந்த நாட்டின் நல்லிணக்கம் ஆபத்தில் இருக்கும் போது சண்டையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேலும் கூறியுள்ளார்.