தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக கனடாவிற்கு வந்த தமிழ் ஏதிலி ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், தாம் தலையிடப் போவதில்லை என கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
2010-ஆம் ஆண்டில் 'எம்.வி. சன் சீ' (M.V. Sun Sea) கப்பல் மூலம் கனடாவின் மேற்கு கடற்கரைக்கு வந்த 492 பேரில் ஒருவரான குமார் துரைசிங்கம் என்பவரின் எதிர்காலம் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்தசங்கரி, "இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது.

நீதிமன்றமே இது குறித்து முடிவெடுக்கட்டும். கடந்த காலங்களில், 'சன் சீ' கப்பலில் வந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பக் கூடாது என நான் வாதிட்டுள்ளேன். ஏனெனில், அங்கு திரும்பிய ஒருவர் அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தை விசாரிக்க கனடிய நீதிமன்றங்களே சரியான இடம் என்று நான் நம்புகிறேன்," என்றார். குமார் துரைசிங்கத்தின் வழக்கறிஞர் கேஸ் போஸ்கேட் (Kes Posgate) கூறுகையில், குமார் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, இதே கப்பலில் வந்த சத்தியபவன் ஆசிர்வாதம் என்பவர் இலங்கைக்குத் திரும்பியபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி சத்தியக்கடதாசி தாக்கல் செய்திருந்ததை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
2010-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, தாய்லாந்திலிருந்து புறப்பட்ட 'எம்.வி. சன் சீ' சரக்குக் கப்பல் மூலம் 492 தமிழர்கள் கனடாவிற்கு வந்தனர்.
இவர்களில் 63 சதவீதத்தினரின் ஏதிலி தஞ்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், குமார் துரைசிங்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இருப்பினும், அவர் கடந்த 16 ஆண்டுகளாக ஸ்கார்பாரோ பகுதியில் தச்சராகப் பணியாற்றி கனடாவில் வசித்து வந்தார். அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
"நான் 16 ஆண்டுகளாக இங்குள்ளேன், என்னைக் கனடியனாகவே உணர்கிறேன். இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் எனக்கு என்ன நடக்கும் என்று நினைத்தால் மிகுந்த அச்சமாக உள்ளது," என குமார் துரைசிங்கம் கவலையுடன் தெரிவித்துள்ளார்.