காபூலில் இருந்து புறப்பட்ட முதல் கனேடிய விமானம்: காப்பாற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியானது
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் 188 பயணிகளுடன் முதல் கனேடிய விமானம் காபூலில் இருந்து புறப்பட்டுள்ளது.
காபூல் நகரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணி துரிதமாக செயல்படுத்தப்படும் என்றே கனேடிய ராணுவ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், 175 ஆப்கானிஸ்தான் மற்றும் 13 வெளிநாட்டு பிரஜைகளுடன் வியாழக்கிழமை மாலை விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கான் மக்கள் கனேடிய குடிமக்கள் உள்ளிட்டவர்களுடன் வேறு நாடுகளின் விமானங்களும் கனடாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய குழப்பமான சூழலில் தகுதியான அனைவரையும் அகதிகள் அந்தஸ்தில் அழைத்து வரவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அப்பாவி மக்களை மீட்கும் பணியில் உதவும் பொருட்டு, காபூல் நகரில் கனேடிய ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
மேலும் காபூல் விமான நிலையம் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தாலிபான்களால் அச்சுறுத்தல் இருப்பதாகவே கூறப்படுகிறது.