கனடாவில் கொரோனா விதிகளை மீறியவர்கள்: வெளியான ஆய்வறிக்கை
கனடாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 30% மக்கள் கொரோனா விதிகளை மீறியுள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.
Saskatchewan பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவு ஜூன் 1ம் திகதி முதல் 14ம் திகதி வரை கனடா முழுவதும் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளது.
இதில் 29% கனேடியர்கள் கொரோனா விதிகளை ஒருமுறையாவது மீறியதாக தெரிவித்துள்ளனர். கொரோனா விதிகளை மீறியவர்களில் 62% மக்கள், அது நியாயமானது என்று அவர்கள் உணர்ந்ததாக கூறியுள்ளனர்.
பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கவே விதிகளை மீறியுள்ளனர். சிலர், கட்டுப்பாடுகள் தேவை இல்லை எனவும், தாங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா விதிகள் தொடர்பில் மக்களை சமூக ஊடகங்கள் குழப்பத்தில் ஆழ்த்தியதாக Saskatchewan சுகாதார அமைச்சர் Paul Merriman குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா விதிகள் அமுலுக்கு வந்த பின்னர் சமூக ஊடகங்களில் பலபேர் தங்களுக்கு சாதகமான பொருளில் அதை விளக்கமளித்திருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு சார்பில் மிக தெளிவாக விளக்கமளித்தாலும், மக்கள் சமூக ஊடகங்களையே நம்பியுள்ளனர். 35% கனேடிய மக்கள் கொரோனா விதிமுறைகளை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி 71% மக்கள் தங்கள் நண்பர்கள் உறவினர்கள் மூலம் கொரோனா விதிகளை தெரிந்து கொண்டுள்ளனர் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.