கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்களுக்கு பேரிடி: வெளிவரும் புதிய தகவல்
ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கொரோனா சான்றிதழ் முறையை அமுலுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதனால் முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டவர்கள், அரசு வழங்கும் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஐரோப்பிய நாடுகளில் நுழையலாம்.
ஆனால் அனைத்து கனேடியர்களும் தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
கனடாவை பொறுத்தமட்டில், ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ள மாடர்னா, பைஸர், ஆஸ்ட்ராசெனகா மற்றும் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் ஜான்சன் நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை அனுமதி அளிக்காத, ஆஸ்ட்ராசெனகாவின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டுக்கும் கனடா அனுமதி அளித்து, குறித்த தடுப்பூசி டோஸ்கள் பயன்பாட்டில் உள்ளன.
தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலும், கனேடியர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் நுழைய முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரண்டுமே ஒரே தடுப்பூசி என்ற நிலையில், இந்திய தயாரிப்புக்கு மட்டும் ஏன் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது இந்திய அரசின் நிர்வாக குளறுபடி என்றே பார்க்கப்படுகிறது.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி டோஸ்களை கனேடியர்கள் 1.6 மில்லியன் மக்கள் போட்டுள்ளனர். ஆனால் 272,000 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த 272,000 கனேடியர்களே இந்திய அரசின் நிர்வாக குளறுபடிகளால், ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைய முடியாதபடி சிக்கலில் உள்ளனர்.
ஆனால் ஒருசாரார், இந்த சிக்கலுக்கு ஆஸ்ட்ராசெனகா நிறுவனமே காரணம் எனவும், கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.