கொரோனா தொற்றுநோய்க்கான உதவிகள் போதும்: கனேடியர்களின் தற்போதைய மனநிலை
கனேடியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கொரோனா தொற்றுநோய்க்கான உதவிகளை பெடரல் நிர்வாகம் குறைக்க வேண்டும் என விரும்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பலர் குறித்த உதவிகளை பெடரல் நிர்வாகம் நிறுத்திவிடலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். கனடாவில் Nanos Research என்ற அமைப்பு முன்னெடுத்த ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
36 சதவீத கனேடிய மக்கள் கொரோனா தொடர்பிலான அரசு உதவிகளை குறைத்துக்கொள்ள ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 31 சதவீத கனேடியர்கள், குறித்த உதவிகளை அரசு ரத்து செய்ய வேண்டிய தருணம் இதுவென தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் 7 சதவீத கனேடியர்கள், அரசு உதவிகளை இன்னும் அதிகரித்தால் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 21 சதவீத மக்கள், தற்போது அளித்துவரும் உதவிகள், இதே அளவில் நீடிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுகளில், பெடரல அரசின் உதவிகள் அதிகரிக்கவோ அல்லது இதே அளவில் நீடிக்கவோ செய்யலாம் என ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் தெரிவித்துள்ளனர்.
கியூபெக் மற்றும் அட்லாண்டிக் கனடா மக்கள் இதற்கு நேர்மாறாக, அரசு உதவிகளைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது ரத்து செய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, தற்போதுள்ள ஊக்கத்தொகைகள் மற்றும் வணிகம் சார்ந்த பெருந்தொற்று தொடர்பான உதவிகள் மிக விரைவில் காலாவதியாகும் அல்லது மாற்றப்படும் என்று துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் அக்டோபர் 21ம் திகதி அறிவித்துள்ளார்.
இருப்பினும் உதவி தேவைப்படுவோரை கண்டறிந்து, அவர்களுக்கான புதிய திட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றார்.