அமெரிக்க கேபிடால் கட்டிட தாக்குதல் மர்ம நபர் அடையாளம் காணப்பட்டார்!
அமெரிக்க கேபிடால் கட்டிட தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி இண்டியானா பகுதியை சேர்ந்த நோவா கிரீன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க நாடாளுமன்ற கேபிடால் கட்டிடத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது மோதியதில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.
அதன்பின்னர் காரில் இருந்து வெளியே குதித்த ஓட்டுனர் அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில், அதிகாரி ஒருவர் பலியானதை அடுத்து தொடர்ந்து கேபிடால் பொலிசார் அந்த நபரை சுட்டு கொன்றனர். எனினும், தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவரவில்லை. அவரது தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் , வாஷிங்டன் பெருநகர காவல் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ கூறும்பொழுது, இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல எனவும் , விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தால் கேபிடால் கட்டிடம் முடக்கப்பட்டு உள்ளதுடன் கட்டிடத்தின் உள்ளே இருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. இதேபோன்று கட்டிடத்திற்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் மர்ம நபர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் 18 ஆண்டு கால பணி அனுபவம் கொண்டவர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடனும் நானும் மனமுடைந்து விட்டோம் என தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அமெரிக்காவின் கேபிடால் பகுதியில் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடந்த வன்முறை தாக்குதலில் காவல் அதிகாரி வில்லியம் இவான்ஸ் கொல்லப்பட்டும், சக அதிகாரி உயிருக்கு போராடி வருகிறார் என்பது பற்றியும் அறிந்து ஜில் மற்றும் நான் மனமுடைந்து போனோம் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை கொடி கம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்ற உத்தரவையும் பைடன் பிறப்பித்து உள்ளார். இதேவேளை , தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி இண்டியானா பகுதியை சேர்ந்த நோவா கிரீன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
அத்துடன் தாக்குதலில் காயமடைந்த இவான்சின் சக பணியாளர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் பயப்படும்படி எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேபிடால் கட்டிடத்தில் இந்த ஆண்டு பணியில் உயிரிழந்தவர்களில் இவான்ஸ் 2வது அதிகாரி ஆவார்.
கடந்த ஜனவரி 6ந்தேதி முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் பணியில் இருந்த பிரையன் டி சிக்நிக் என்ற அதிகாரி காயமடைந்து சிகிற்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் கேபிடால் கட்டிட தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வருத்தம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
கேபிடாலை பாதுகாக்க இவான்ஸ் உயிர் தியாகம் செய்துள்ளார். அவருடைய குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களின் வேதனையில் பங்கு கொள்கிறோம்.
இந்த சவாலான நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகளுக்காக பெருமைப்படுகிறோம் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.