பிரதமர் மார்க் கார்னியின் அதிரடி அறிவிப்பு
ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்த மறுதினமே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய உற்பத்தி வரியை (Federal Excise Tax) தற்காலிகமாக நீக்குவதாகப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
இந்த வரி நீக்கம் வரும் திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 7-ம் திகதி (Labour Day) வரை அமலில் இருக்கும்.
இதன் மூலம் எரிபொருள் விலையில் பின்வரும் மாற்றங்கள் ஏற்படும்:
• பெட்ரோல்: லீட்டருக்கு 10 காசுகள் (cents) குறையும்.
• டீசல்: லீட்டருக்கு 4 காசுகள் குறையும்.
• விமான எரிபொருள்: லீட்டருக்கு 4 காசுகள் வரி நீக்கப்படும்.

இந்த தற்காலிக வரிச் சலுகையினால் அரசுக்கு சுமார் 2.4 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் உடனான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் கார்னி, "ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியான எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது கனடியர்களிடையே ஏற்படுத்தியுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்த 'வரி விடுமுறை' ஒரு பாலமாக அமையும்," என்று ஒட்டாவாவில் தெரிவித்தார்.
தற்போது கனடாவில் ஒரு லீட்டர் பெட்ரோலின் சராசரி விலை 1.76 டொலராக உள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இது 1.26 டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கையை மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர், கனடா இந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சியை (Recession) சந்திக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.