கத்தோலிக்க சபையின் மெளனம் அவமானம்: கொந்தளித்த பூர்வக்குடி தலைவர்கள்
உண்டுறை பள்ளிகளின் பங்கு தொடர்பில் கத்தோலிக்க சபை மன்னிப்பு கேட்க வேண்டும் என கனடாவின் பூர்வக்குடி சமூகம் மொத்தமாக அழைப்பு விடுத்துள்ளது.
குடியிருப்புகளில் இருந்து வலுக்கட்டாயமாக பறித்துச் சென்று, சிறார்களின் கலாச்சாரம், மொழி, அடையாளம் ஆகியவற்றை அழித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பூர்வக்குடி தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.
கனடாவில் சமீப நாட்களில் அம்பலமான சம்பவம் தொடர்பில் உடனடியாக போப் பிரான்சிஸ் தலையிட்டு உரிய நடவடிக்கை முன்னெடுக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இனிமேலும் மறுப்பு தெரிவிக்க முடியாது, போப் பிரான்சிஸ் கண்டிப்பாக பதில் கூறியே ஆகவேண்டும். அடையாளப்படுத்தப்படாத இந்த கல்லறையே அந்த கொடூரங்களின் சாட்சி என Rick Alex என்பவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கம்லூப்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்திய உண்டுறை பள்ளியானது ஒரு காலத்தில் கனடாவின் மிகப்பெரிய உண்டுறை பள்ளியாக இருந்தது. சுமார் 500 சிறார்கள் வரை அங்கு தங்கியிருந்தனர்.
குறித்த பள்ளியை 1893 முதல் 1969 வரையில் கத்தோலிக்க சபை சார்பாக தேவாலயங்கள் நிர்வகித்து வந்துள்ளன. பின்னர் கைப்பற்றப்பட்டு 1977ல் மூடப்படும் வரையில் பெடரல் அரசாங்கம் தினசரி பள்ளியாக செயல்படுத்தி வந்துள்ளது.
கனடாவில் உள்ள உண்டுறை பள்ளிகள் தொடக்க காலத்தில் ரோமன் கத்தோலிக்க, ஆங்கிலிகன், யுனைடெட், மெதடிஸ்ட் மற்றும் பிரஸ்பைடிரியன் தேவாலயங்களால் இயக்கப்பட்டு வந்துள்ளன.
ஆனால் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே கனடாவில் 60 சதவீத உண்டுறை பள்ளிகளை நிர்வகித்து வந்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபை மட்டுமே இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கோராமலும் உள்ளது.